நாட்டு மருந்து என்ற பெயரில் விஷம் கொடுத்து கர்ப்பிணி கொலை: இரண்டாவதும் பெண் குழந்தை என்பதால் கணவர், மாமியார் வெறிச்செயல்

நாட்டு மருந்து என்ற பெயரில் விஷம் கொடுத்து கர்ப்பிணி கொலை: இரண்டாவதும் பெண் குழந்தை என்பதால் கணவர், மாமியார் வெறிச்செயல்

நாட்டு மருந்து என்ற பெயரில் விஷம் கொடுத்து 6 மாத கர்ப்பிணியைக் கொலை செய்ததாக வாலிபர், அவரது தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் நரசராவ் பேட்டையை சேர்ந்தவர் வேணு. இவரது மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சிவரஞ்சனி கர்ப்பமடைந்தார். தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிய ஸ்கேன் செய்வதற்காக கணவர் வேணு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.ஸ்கேன் செய்து பார்த்ததில் சிவரஞ்சனி வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரிய வந்தது.

ஏற்கெனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தையா என நினைத்த வேணு, தனது மனைவியின் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தார். இதனால் தாயிடம் இதுகுறித்து வேணு கூறியுள்ளார். அதையடுத்து நாட்டு மருந்து என்ற பெயரில் சிவரஞ்சனிக்கு சில பச்சிலைகளை அரைத்துக் கொடுத்துள்ளனர். இதனால் சிவரஞ்சனி உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் வீட்டில் வைத்தே வைத்தியம் பார்த்துள்ளனர். இந்த நிலையில், உடல்நிலை மோசமாகி சிவரஞ்சனி நேற்று உயிரிழந்தார்.

தங்கள் மகளுக்கு கருக்கலைப்பு என்ற பெயரில் விஷம் கொடுத்து வேணுவும், அவரது தாயும் கொலை செய்து விட்டதாக சிவரஞ்சனியின் தாய் நரசராவ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், வேணுவையும், அவரது தாயாரையும் கைது செய்தனர். தங்கள் மகள் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்த மருத்துவமனையின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவரஞ்சனியின் தாய், போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு மருந்து என்ற பெயரில் விஷம் கொடுத்து கணவனை மனைவியைக் கொலை செய்த சம்பவம் நரசராவ் பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in