
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. மழை ஓய்ந்ததையடுத்து தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பார்க்கும் இடங்கள் எல்லாம் பனிப்பொழிவால் வெண்மையாக காட்சியளிக்கிறது. கடும் பனிப்பொழிவால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கி உள்ளனர். கொட்டும் பனியை பொருட்படுத்தாமல், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர். இரவு வேளையில் பனிப்பொழிவு 7 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவே உள்ளது. டிசம்பர் மாதம் முதல் வாரம் தொடங்க வேண்டிய பனிப்பொழிவு, டிசம்பர் நிறைவு பெறும் நாட்களில் ஆரம்பித்துள்ளது. வரும் நாட்களில் பனிப்பொழிவு மேலும் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2023 புத்தாண்டை ஆனந்தமாக கொண்டாடி மகிழ கொடைக்கானலில், குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், இங்குள்ள அனைத்து விடுதிகள், ஓட்டல்களில் தங்கும் அறைகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பல இடங்களில் அறைகள் காலியில்லை அறிவிப்பு பலகை காணமுடிகிறது. பனிப்பொழிவு, விடுதி கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் அதிகரிப்பு என இவற்றை பொருட்படுத்தாமல் புத்தாண்டை கொண்டாடும் மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த பாடில்லை.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இயற்கை அழகை இப்பனியிலும் புத்தாண்டை கொண்டாடும் விதமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது.