மூதாட்டியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரின் முகத்தில் மலத்தை பூசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், கொத்தப்புளியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாயி என்கிற நாகம்மாள்(90). அதே பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவர், இவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மூதாட்டியை ஆபாச வார்த்தைகளால் திட்டுவதையும், அவரிடம் தொடர்ந்து வம்பிழுப்பதையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் நாகம்மாள் வீட்டிற்கு வெளியில், படுத்திருந்தபோது அவ்வழியாகச் சென்ற கிருஷ்ணன் மூதாட்டியை ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டே சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மூதாட்டி பாப்பாயியும் கிருஷ்ணனைப் பதிலுக்குத் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், அந்த மூதாட்டியைத் திட்டிக்கொண்டே மனித மலத்தை எடுத்து அவரின் முகத்தில் பூசி இருக்கிறார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம்போட்டுக் கத்தி இருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து விசாரித்துள்ளனர். பின்பு தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூதாட்டியின் மீது மனித மலத்தைப் பூசிய கிருஷ்ணனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.