நெருங்கிடுச்சு பொங்கல் பண்டிகை: திருப்பூர் பனியன் கம்பெனிகளில் ஓவர்டைம் வேலை

நெருங்கிடுச்சு பொங்கல் பண்டிகை: திருப்பூர் பனியன் கம்பெனிகளில் ஓவர்டைம் வேலை

பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் ஆர்டர்களை விரைந்து முடிக்க பனியன் கம்பெனி உரிமையாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் ஓவர்டைம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் கட்டிங், அயர்னிங், டைலரிங், பேக்கிங், செக்கிங், நிட்டிங், சிங்கர், கைமடித்தல், டேமேஜ், அடுக்குதல், லோக்கல் மெஷின் ஆகிய பிரிவுகளில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் மதுரை, திருச்சி, தேனி, திருநெல்வேலி, தஞ்சாவூர், சிவகங்கை, நாகர்கோவில், நாகபட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். இவர்கள் குடும்பத்தோடு திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது குடும்பத்தோடு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அப்போது திருப்பூரே வெறிச்சோடி காணப்படும். திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் வெளியூர் தொழிலாளர்கள் குறிப்பாக தென்மாவட்ட தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக பண்டிகை காலங்களில் சிறப்பு பஸ்கள் திருப்பூரில் இருந்து இயக்கப்படும்.

இந்நிலையில், தென்மாவட்ட தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று விடுவர் என்பதால், திருப்பூர் பனியன் கம்பெனிகளில் ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்க பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பனியன் கம்பெனிகளில் ஆர்டர்களை முடிக்க ஏதுவாக ஓவர் டைம் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் திரும்பி வர ஒரு வாரமாகும் என்பதால், ஆர்டர்களை முடிப்பதில் பனியன் கம்பெனி உரிமையாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக ஏற்றுமதி பனியன் நிறுவனங்களில் இரவு. பகலாக ஆர்டர்களை முடிக்க பனியன் உற்பத்தி நடந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in