பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை: பல வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளர் அதிரடி கைது

பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமை: பல வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளர்  அதிரடி கைது

திருக்கோவிலூர் அருகே பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்  நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த காவல் ஆய்வாளர் ஒருவர் நீதிபதியின் அதிரடியால்  நீண்ட நாட்களுக்கு பிறகு   கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்.

திருக்கோவிலூர் அருகே உள்ள தி. மண்டபம் பகுதியில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2011 ம் ஆண்டில் ஒரு திருட்டு புகாரை விசாரிக்க அங்கு சென்ற திருக்கோவிலூர் போலீஸார், அங்குள்ள பெண்கள் சிலரை  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது  அவர்களில் ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் 17 வயது சிறுமி உள்ளிட்ட 4 பழங்குடியின இருளர் பெண்களை, காட்டு பகுதிக்கு அழைத்து சென்று திருக்கோவிலூர் போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன்,  பக்தவச்சலம் உள்ள 5 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப் பட்டத்தோடு,  அவர்கள் மீது திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர், இவ்வழக்கு  விழுப்புரத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் பழங்குடியின இருளர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய போலீஸார் 4 பேர் ஏற்கனவே ஜாமின் பெற்று விட்ட நிலையில் தற்போது அரக்கோணம் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஸ்ரீனிவாசன் மட்டும் ஜாமின் பெறாமல் இருந்ததால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. 

அதனையடுத்து  கடந்த மே 16ம் தேதி நேரில் ஆஜரானார்.  அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பாக்கியஜோதி  உத்தரவிட்டார்.  இதனை அறிந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் நீதிமன்றத்தில் இருந்து உடனடியாக  வெளியேறினார். இன்று அவர்  வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் வேண்டி மனுதாக்கல் செய்தார்.  

இம்மனுவை  நீதிபதி பாக்கியஜோதி தள்ளுபடி செய்து ஸ்ரீனிவாசனை கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருக்கோவிலூர் போலீஸார் காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசனை கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.  அவரை வருகின்ற 21ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in