குரோம்பேட்டையில் இரட்டைக்கொலை; ஆந்திராவில் சிக்கிய கொலையாளிகள்: காட்டிக்கொடுத்த சிசிடிவி

குரோம்பேட்டையில்  இரட்டைக்கொலை; ஆந்திராவில் சிக்கிய கொலையாளிகள்: காட்டிக்கொடுத்த சிசிடிவி

குரோம்பேட்டை அருகே கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கொலையாளிகளைக் கைது செய்துள்ளனர்.

சென்னை, குரோம்பேட்டை அடுத்துள்ள உள்ள ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் . இவரது மூத்த மகள் வசந்தி கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் வசந்திக்கும் , மோசஸ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளாமலேயே குரோம்பேட்டையில் வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். அடிக்கடி குடிபோதையில் மோசஸ் தகராறு செய்வதால் ஆத்திரமடைந்த வசந்தி, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சகோதரியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து வசந்தியை போனில் சமாதானம் செய்ய மோசஸ் முயன்றுள்ளார். அதற்கு வசந்தி உடன்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மோசஸ் வசந்தியின் பெற்றோரான ஆறுமுகம், மஞ்சுளாவை அக்.2-ம் தேதி கொலை செய்துவிட்டுத் தலைமறைவானார்.

வசந்தியின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் மோசஸ் தங்கியிருந்த வீட்டை காவல்துறையினர் உடைத்துப் பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் வசந்தியின் பெற்றோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.

அதில் கொலை செய்யப்பட்ட அன்று இரவு வசந்தியின் பெற்றோர்களை இருவர் அழைத்து வந்து கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் இருப்பது மோசஸ் மற்றும் அவரின் உறவினர் ஆனந்த் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஆந்திராவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை நேற்று மாலை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in