தென்னை மட்டையால் தாக்கியதில் பிளஸ் 2 மாணவன் பலி: அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்

தென்னை மட்டையால் தாக்கியதில் பிளஸ் 2 மாணவன் பலி: அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்

தென்னை மட்டையால் தாக்கியதில் பிளஸ் 2 மாணவன் பலியானார். அரசு பள்ளியில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சக்கில் நத்தம் அருகே உள்ள கப்பல்வாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று பிற்பகல், சக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும் இரு மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது சத்துணவிற்கு சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த தென்னை மட்டையை எடுத்து ஒரு மாணவனை மற்றொரு மாணவன் தாக்கியுள்ளார். இதில் அடிபட்ட மாணவன் சுருண்டு விழுந்த போது அவருக்கு வலிப்பு வந்துள்ளது. இதையறிந்த மாணவர்கள், ஆசிரியர்களிடம் கூறி, சம்பந்தப்பட்ட மாணவனை பர்கூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே மாணவன் உயிரிழந்து விட்டதாகக்கூறினர்.

தகவல் அறிந்த சக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பர்கூர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தாக்கிய மாணவனைத் தேடி வருகின்றனர். இறந்து போன மாணவனும், தாக்கிய மாணவனும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in