பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி மாறுகிறது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

பிளஸ் 2  ரிசல்ட் தேதி மாற்றம்
பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றம்பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி மாறுகிறது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 79 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. இப்பணியில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,"12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பின்பாக வெளியிடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என்று கூறினார்.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வெழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in