காவல்துறை, சிறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

காவல்துறை, சிறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் அதிரடி உத்தரவு

குற்ற விசாரணை அடையாள சட்டப்பிரிவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள  வழக்கில் ஆறு வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்படுபவர்களின்   கைரேகை பதிவுகள், கருவிழி மற்றும் விழித்திரை பதிவுகள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கவும், சேமித்து வைக்கவும்  காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் குற்ற விசாரணை அடையாளச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ள இச்சட்டம், 2022 ஏப்ரல் 18-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில், தனிமனித சுதந்திரத்தையும், உரிமையையும் பறிக்கும் வகையில் உள்ள பிரிவுகளை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதில், மக்கள்நல அரசான இந்திய அரசு, தண்டனை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில்  எந்த சட்டமும் இயற்ற முடியாது எனவும், அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கும் இந்த சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் இந்த சட்டப் பிரிவுகள் தன்னிச்சையானவை என்றும், இது சம்பந்தமான உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வழிவகை செய்யாதது சட்ட விரோதமானது என்றும் இயற்கை நீதிக்கு முரணானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று  விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, ஆறு வாரங்களில் இந்த  மனுவுக்கு பதிலளிக்க  மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in