
புதுச்சேரி மாநிலத்தில் இன்று பத்தாவது நாளாக பாண்லே நிறுவனத்தின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதுச்சேரி மக்களின் பால் தேவையை அரசு நிறுவனமான பாண்லே தீர்த்து வைத்து வருகிறது. தரமானதாகவும், விலை குறைவாகவும் உள்ள அந்த பாலையை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். புதுச்சேரி பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் லிட்டரும், தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து 40 ஆயிரம் லிட்டர் பாலும் கொள்முதல் செய்யப்பட்டு நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் முகவர்கள் மூலம் பொது மக்களுக்கு விநியோகப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து பெறப்படும் பாலுக்கும் கடந்த பல நாட்களாக பாண்லே நிறுவனம் பணத்தைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெளி மாநிலங்கள் வழங்கும் பாலை நிறுத்திவிட்டன. இதனால் புதுவை மாநிலத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து மட்டுமே தற்போது பால் பெறப்பட்டு வருகிறது.
இதனால் கடந்த 10 தினங்களாக சுமார் 25 ஆயிரம் லிட்டர் முதல் 50 ஆயிரம் லிட்டர் வரையிலுமே பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் புதுவையில் கடும் பால் தட்டுப்பால் ஏற்பட்டுள்ளது. நேற்று 25 ஆயிரம் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்பட்ட நிலையில் இன்று 33 ஆயிரம் லிட்டர் மட்டுமே முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பால் வழங்க முடிக்காமல் முகவர்கள் தடுமாறி வருகின்றனர்.
பாண்லே பாலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மற்ற நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகள் அதிகம் விற்பனையாகின்றன. முதல்வர், துணைநிலை ஆளுநர் உள்ளிட்டவர்கள் இதில் தலையிட்டு பாண்லே நிறுவனத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்கி பழையபடி அதன் மூலம் பால் விநியோகம் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.