
நிதிநெருக்கடியில் தவித்து வந்த தங்கள் மகனுக்கு உதவ முடியாத வருத்தத்தில் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குமரிமாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமரிமாவட்டம், வடக்கன்பாகத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள்(61). சென்னை துறைமுகத்தில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பிரேமலதா(58). இவர்களுக்கு ஆதவன்(32), மாலன்(28) என இருமகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலைசெய்து வருகின்றனர்.
ஆதவன் தன் தந்தை, தாய் ஆகியோருக்கு ஃபோன் செய்தபோது அவர்கள் எடுக்கவில்லை. நீண்டநேரமாக போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த ஆதவன் உறவினர்களை அழைத்துத் தகவல் சொன்னார். அவர்கள் சென்று பார்த்தபோது ஆறுமுகப்பெருமாள், பிரேமலதா இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
போலீஸார் நடத்திய விசாரணையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்த ஆதவன், சொந்தமாக ஒரு கம்பெனி தொடங்கியுள்ளார். ஆனால் கரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆறுமுகப்பெருமாள் தன் குடும்ப சொத்துகளை விற்று கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக ஆதவனுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால், பத்திரப்பதிவு உரிய நேரத்தில் நடக்கவில்லை. இதனால் மனம் உடைந்து தம்பதிகள் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.