கனியாமூர் பள்ளியை உடனடியாகத் திறங்க; முற்றுகையிட்ட பெற்றோர்கள்: நம்பிக்கை அளித்த கலெக்டர்

ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெற்றோர்கள்
ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெற்றோர்கள்

மாணவியின் மரணத்திற்குப் பிறகு நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து மூடிக்கிடக்கும் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் இன்று முற்றுகையிட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜூலை மாதம் 17-ம் தேதி நடந்த கலவரத்தால் பள்ளி வளாகம் முழுமையாக சேதமடைந்தது.

அதனைத் தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக பள்ளி திறக்கப்படவில்லை. இதனிடையே மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், 9 முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மட்டும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மாணவ, மாணவியர்கள் தரப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடனடியாக பள்ளியைத் திறக்கவேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 நாட்களில் மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில் தனியார் பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு, பள்ளியைத் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாதததால், அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆட்சியர் மாலையில் வந்ததும் 10 நபர்கள் மட்டும் உள்ளே சென்று ஆட்சியரை சந்தித்து முறையிடலாம் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கள்ளக்குறிச்சி டிஎஸ்பி புகழேந்தி கணேசன் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

மாலையில் ஆட்சியர் ஷ்ரவன்குமார் வந்ததும், பெற்றோர்கள் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்களில் 10 பேர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சியரை சந்தித்த அவர்கள் 'மாணவர்கள் ஆன்லைனில் படிப்பதால் மாணவர்களுடைய கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. மற்ற பள்ளி மாணவ, மாணவிகள் நேரடி வகுப்பில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை, அதனால் பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து விரைவில் பள்ளி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் இரண்டு நாட்களில் பள்ளி சரி செய்யும் பணி, மறு சீரமைப்பு பணிகளைத் தொடங்க உத்தரவு நகல் அளிக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in