குறைந்த கட்டணம்; ஒரே நாளில் சேர்ந்துவிடும்: அரசு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் அனுப்பலாம்!

குறைந்த கட்டணம்; ஒரே நாளில் சேர்ந்துவிடும்: அரசு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் அனுப்பலாம்!

தமிழகத்தில் அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் அனுப்பலாம். மிக குறைந்த கட்டணத்தில் இந்த பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்பட பெரு நகரங்களில் வசிப்போர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் தங்களது இருசக்கர வாகனத்தையும் கொண்டு செல்வார்கள். ரயில்களில் மட்டுமே இவற்றை கொண்டு செல்ல முடியும். ஆனாலும், தங்கள் பொருட்களை ஊர் அருகில் கொண்டு செல்ல முடியாது. நெல்லை உள்ளிட்ட குறிப்பிட்ட இடத்தில் இருந்து வேறு வாகனங்களை பிடித்து பொருட்களை பொதுமக்கள் கொண்டு செல்கின்றனர். இதற்காக கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியது உள்ளது. தற்போது, தமிழக அரசு அறிவித்துள்ள பார்சல் சர்வீஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கள் ஊர் அருகிலேயே மக்களின் பொருட்களை சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல்களை கொண்டு செல்லலாம். முதல் கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு பார்சல் சர்வீஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் தங்கள் பார்சல்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி- சென்னை, ஓசூர்- சென்னைக்கு 80 கிலோ பார்சல் வரை 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்க்காமல் ரூ.210 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரையிலில் இருந்து சென்னைக்கு 300 ரூபாயும், கோவையில் இருந்து சென்னைக்கு 330 ரூபாயும், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு 390 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் பொருட்களை நாளை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in