தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் தங்களின் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் மூன்று நாட்களுக்கு தொடங்கியுள்ள போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் ஊராட்சிகளை நிர்வகிக்க ஊராட்சி செயலாளர்கள் பணியில் இருந்து வருகின்றனர். அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் கணக்கு, வழக்கு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அவர்கள்தான் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு அதிக பணிச்சுமை உள்ளதாகவும், அவற்றைக் குறைக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்குக் கருவூலம் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனாலும், இதுவரை அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் நேற்று முதல் நாளை வரை மூன்று நாட்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கிராம ஊராட்சி தலைவர்கள் மூலம் செயலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உரிய காலத்தில் வழங்கப்படாத நிலையில், அதனை கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும். இணையதளத்தில் வீட்டு வரி விவரங்களைப் போதிய கால அவகாசம் வழங்காமல் பதிவு செய்து விடவும், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட இயலாதவர்களின் விவரங்களை கணக்கெடுப்பு செய்வதற்கு உரிய அவகாசம் வழங்காமல் உடனடியாக விவரங்கள் கோரப்படுவதைக் கண்டித்தும் ஊராட்சி செயலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் நாளையும் தொடரும் என்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம ஊராட்சி மன்றங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.