
தமிழகத்தின் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் இருவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் - தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன.
அப்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்ற 106 பேரின் பெயர்களை மத்திய அரசு நேற்று இரவு வெளியிட்டது. அதில் தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இன பாம்புபிடி வீரர்கள் வடிவேல் கோபால், ம.சி.சடையன் ஆகியோர் பத்மஶ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர். மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சினிமா பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
பத்மவிபூஷன் விருதுக்கு திலீப் மஹாலானபிஸ் (மருத்துவத்துறை, பாலகிருஷ்ண தோஷி, ஸ்ரீ ஜாகீர் ஹூசேன், ஸ்ரீனிவாஸ் வரதன், முலயாம்சிங் யாதவ், எஸ்.எம். கிருஷ்ணா ஆகிய ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
பத்மபூஷன் விருதுக்கு குமார்மங்கலம் பிர்லா, தீபிகா தர், வாணி ஜெயராம், எஸ்.எல். பைராப்பா, சுவாமி சின்ன ஜியார், சுமன் கல்யாண்பூர், கபில் கபூர், சுதா மூர்த்தி, கமலேஷ் பட்டேல் ஆகிய ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பத்மஸ்ரீ விருதுபெற வடிவேல் கோபால், ம.சி. சடையன், எம்.எம்.கீரவாணி உள்பட 91 பேர் என தேர்வாகியுள்ளனர். மொத்தம் 106 பேருக்கு இந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.