`ஆர்டர்லிகளை உடனே பணிக்கு அனுப்ப வேண்டும்'- உயரதிகாரிகளுக்கு டிஜிபி அதிரடி உத்தரவு

`ஆர்டர்லிகளை உடனே பணிக்கு அனுப்ப வேண்டும்'- உயரதிகாரிகளுக்கு டிஜிபி அதிரடி உத்தரவு

ஆர்டலிகளை உடனடியாக அலுவலக பணிக்கு திருப்பி அனுப்ப வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து காவல்துறையில் ஆர்டலி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. காவல் நிலைய பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் வீட்டில் பணிகளை செய்வதற்காக பணியமர்த்தபட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டலிகள் அதிகாரிகளின் வீடுகளில் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட வழக்கு ஒன்றில் ஆர்டலி என்ற பெயரில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக காவலர்களை பயன்படுத்துவது குற்றம் என்றும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் வீடுகளில் பணிபுரியும் ஆர்டலிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்ததுடன் ஆர்டலிகளை திருப்ப பணிக்கு அழைக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து உயரதிகாரிகள் வீடுகளில் பணியாற்றி வந்த 19 ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டது.

இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆங்கிலேயரின் ஆர்டலி முறை தொடர்வது வெட்கக்கேடானது எனவும் ஆர்டலி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை வரும் 18-ம் தேதிக்குள் டிஜிபி சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்டலிகளை திரும்ப பெறாவிட்டால் சம்மந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடப்படும் என நீதிபதி எச்சரித்தார்.

இந்நிலையில் ஆர்டலிகளை திரும்ப பெறுவது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் டிஜிபி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சங்கர் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் உள்ள ஆர்டலிகளை உடனடியாக திரும்ப அனுப்புமாறு உத்தரவிட்ட டிஜிபி, மாவட்ட ஏடிஎஸ்பி அளவில் இருந்து ஏடிஜிபி, டிஜிபி மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ள ஆர்டலிகளை உடனடியாக அலுவலக பணிக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் இதை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in