அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பு கோரிய மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலன்று தன்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், கடந்த 2021 நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப் பட்டதாகவும், தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை எனவும் கூறியுள்ளார்.
தற்போது அந்த வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தைத் தெரிவிக்க கோரியும், பாதுகாப்பு வழங்கக்கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் ஆஜராகி, சி.வி.சண்முகத்திற்கு சமூக வலைதளங்கள் மற்றும் ஃபோன் கால் மூலமாக கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வருவதாகவும், இதுதொடர்பாக அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எந்தவித முகாந்திரமும் இல்லை என கூறி புகாரை காவல்துறையினர் முடித்து வைப்பதாகவும் தெரிவித்தார்.
காவல்துறை சார்பில் வழக்கறிஞர் பாபுமுத்துமீரன் ஆஜராகி, சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தபோது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிய வந்ததன் அடிப்படையில் அவருடைய பாதுகாப்பை விலக்கிக் கொண்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.