குஜராத் முதல்வர் பதவியேற்பில் அழைப்பின் பேரில் பங்கேற்கும் ஓபிஎஸ்: அப்போ ஈபிஎஸ்..?

குஜராத் முதல்வர் பதவியேற்பில் அழைப்பின் பேரில் பங்கேற்கும் ஓபிஎஸ்: அப்போ ஈபிஎஸ்..?

குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் அங்கே ஆட்சி அமைக்கிறது. நாளை நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் அதில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

தமிழக அதிமுகவில் பிளவு ஏற்பட்டு முன்னாள் முதல்வர்கள்  ஓபிஎஸ் ஒரு அணியாகவும், ஈபிஎஸ் தரப்பு மற்றோர் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். முன்னதாக அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட சசிகலா, தினகரன் ஆகியோரும் தனி அணி கண்டுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரையும் ஒரே அணியாக ஒருங்கிணைத்து எதிர்வரும்  நாடாளுமன்ற  தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக அழுத்தம் தந்து வருகிறது.

ஆனால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இதற்கு மசியவில்லை. தான் மட்டுமே தலைவர், தங்கள் தரப்பே அதிமுக என பிடிவாதமாக செயல்பட்டு வருகிறார். அதனால் பாஜக தரப்பில் அவருக்கு எச்சரிக்கைகள் விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதை அடுத்து, அதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. 

அதற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்மூலம் தங்கள் தரப்புக்கு பாஜக, அதிமுக அங்கீகாரம் தந்துவிட்டதாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் தற்போது குஜராத்தில் நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிஜேபி ஆட்சி அமைக்க உள்ளது. அதற்கான பதவி ஏற்பு விழா நாளை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்கு ஓபிஎஸ்-க்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க இன்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் ஓபிஎஸ் புறப்படுகிறார்.  ஈபிஎஸ்-க்கு தரப்படும் முக்கியத்துவம் ஓபிஎஸ்-க்கும்  தரப்படுவதால் பாஜக ஆதரவு யாருக்கு என்று தெரியாமல் இரு தரப்பு அணிகளும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in