காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், விஷம் குடித்து மயங்கிய ஜோடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷம் அருந்திய பெண் சிறுமி என்பதால் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
திண்டுக்கல் அருகே சிறுமலை புதூரை சேர்ந்தவர் செல்வம் (21). கூலித்தொழிலாளியான இவர், மதுரையைச் சேர்ந்த தனது உறவினர் மகளை காதலித்தார். அப்பெண் பருவ வயதை எட்டாததால், இருவரின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து வைப்பதாக அறிவுரை வழங்கினர். ஆனால், தனது காதல் கைகூடாமல் போய் விடும் என உணர்ந்த அச்சிறுமி கடந்த 10 நாட்களுக்கு முன் காதலன் வீட்டுக்கு சென்றார். இதையறிந்த சிறுமியன் பெற்றோர் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்தனர்.
பெற்றோரின் வேண்டுகோளை மறுத்த சிறுமியும், காதலனும் சிறுமலை புதுார் அருகே உள்ள காட்டு பகுதிக்கு நேற்று மாலை சென்றனர். அங்கு இருவரும் விஷம் குடித்து மயங்கினர். இது பற்றி கேள்விபட்ட அப்பகுதியினர் இருவரையும் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவரும் தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.