
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கேரளா மட் டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அதன்படி நாளை பங்குனி மாதம் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
இதையடுத்து, நாளை அதிகாலையில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 19-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் .அன்றைய தினம் இரவு கோயில் நடை அடைக்கப்பட்டு, மாா்ச் 26-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். பக்தர்கள் எப்போதும் போல சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருகை தரலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.