
தமிழ்நாடு- கேரள எல்லையோரப் பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியில் கேரளத்திற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அரிசியை கடத்திவந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு ரேசன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்கும்வகையில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீஸார் இரவு, பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் களியக்காவிளை சார் ஆய்வாளர் முத்துகுமரன் தலைமையில் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது களியக்காவிளை பகுதியில் கார் ஒன்றுவந்தது. அதைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் ஒரு டன் அளவுக்கு ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. கார் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்ததில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசிங்கம் எனத் தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார், பறிமுதல் செய்த ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தியக் காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.