
அரியலூர் அருகே எதிரெதிரே வந்த இரு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி பிரிவு பாதையருகில் அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஒரு கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று இந்த லாரிமீது நேருக்கு நேராக மோதியது.
இதில் ஆந்திர மாநில லாரியை ஓட்டிவந்தவர் லாரிக்குள் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். அதில் வந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இன்னொரு லாரியை ஓட்டிவந்த ஓட்டுநரும் படுகாயங்களுடன் லாரியில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த திருமானூர் காவல் நிலைய போலீஸார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருமானூர் போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.