ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு: அமைச்சர் உட்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு: அமைச்சர் உட்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து  வழிபாடு செய்தனர்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமாக சிறப்பு பெற்றிருப்பது, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும்   நடைபெறும் பல்வேறு  விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்தது, சொர்க்கவாசல் திறப்பு உற்சவம். வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. 

இந்த ஆண்டுக்கான வைகுந்த ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 22-ம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 23-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி  வரை வைகுந்த ஏகாதசியின் பகல்பத்து எனப்படும் திருமொழித் திருநாள் நடைபெற்றது.

இந்நாளில் ஶ்ரீநம்பெருமாள்(உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில், ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் கோவில் பிரகாரங்களில் வலம் வந்தார். பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான இன்று(ஜன.2) அதிகாலை 3.30 மணிக்கு சிம்மகதியில் ஶ்ரீநம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஹஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார்.

தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த ஶ்ரீநம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார்.  முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளினர். அதனைத் தொடர்ந்து காலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 

லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பரமபத வாசலை கடந்த ஸ்ரீநம்பெருமாளுடன் ’ரெங்கா.. ரெங்கா..’, ’கோவிந்தா.. கோவிந்தா..’ என விண்ணதிர, பக்தி கோஷங்கள் முழங்க பக்தர்களும் பின் தொடர்ந்தனர். பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5 மணிக்கு வந்தடைந்தார். 

சுமார் 1 மணி நேரம் அங்கிருந்து  பக்தர்களுக்கு சேவை சாதித்தார். காலை 7 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளினார். 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும். 

திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு நாளை(3ம் தேதி) அதிகாலை 1.15 மணியளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார். இன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி வருகிற ஜனவரி 12 ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா இனிதே நிறைவடைகிறது.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் , மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை நீண்ட வரிசையில் நின்று பக்திபரவசத்துடன் சேவித்து வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  பக்தர்களுக்கு தேவையான குடிநீர்,  சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம், மாநகராட்சியுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in