கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு ரேசன் அரிசி கடத்திச் சென்ற காரை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்ற அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். சினிமாவை விஞ்சும் அளவுக்கு நடந்த இந்த காட்சிகளால் ஜரேனிபுரம் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குமரி மாவட்டம், ஜரேனிபுரம் பகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் புரந்தரதாஸ் தலைமையில் அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் ஒன்று வந்தது. அதிகாரிகள் வாகன தணிக்கை செய்ய அந்தக் காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரைப் பின் தொடர்ந்து சென்றனர்.
காப்பிக்காடு பகுதியில் காரை மடக்கிப் பிடித்தனர். அப்போது காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகள் காரை சோதித்துப் பார்த்தபோது அதில் இரண்டு டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரேசன் அரிசியையும், காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு கிட்டங்கியிலும், பறிமுதல் செய்தக் காரை வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் கொண்டுசென்றனர்.