முகநூல் மூலம் பழகி திருமணம் செய்த பெண்ணிடம் இழந்த 20.50 லட்சம், 37 பவுன் நகையை மீட்டு தருமாறு வனச்சரகர் ஒருவர் புகாரளித்துள்ளார்.
ராமநாதபுரம் கீழக்கரை வனசரக அலுவலகத்தில் வனச்சரகராக முத்துராம் என்பவர் பணியாற்றி வருகிறார். சேலம் சின்ன திருப்பதியைச் சேர்ந்தவர் நஜீனா ஷிபா பர்வின். இவர்கள் இருவரும் முகநூல் மூலம் பழகி வந்தனர். இதை தொடர்ந்து, கடந்த 2020 நவ.7-ல் நஜீனா ஷிபா பர்வீன் வீட்டுக்கு முத்து ராம் சென்றார். அங்கு நஜீனா ஷிபா பர்வீனை நேரில் பார்த்ததும் பிடித்து போனதால், திருமணம் செய்து கொள்ள முத்துராம் முடிவு செய்தார். அன்றைய தினமே, நஜீனா ஷிபா பர்வீன் பெயரில் புதிய காரை முத்துராம் புக் செய்தார்.
இதையடுத்து, சேலம் கோட்டை பள்ளிவாசலில் 2.45 லட்சம் செலவு செய்து நஜீனா ஷிபா பர்வீனை முத்துராம் திருமணம் செய்து கொண்டார். தொழில் தொடங்க கீழக்கரை ஸ்டேட் வங்கி மூலம் 10.50 லட்சம், திருமண பரிசாக 30.5 பவுன் நகை ஆகியவற்றை நஜீனா ஷிபா பர்வீனுக்கு, முத்துராம் கொடுத்தார். இந்நிலையில், 2021 பிப்.15-ல் மாமியார் வீட்டிற்கு முத்துராம் சென்றார். அங்கு அவரது மொபைல் போன் பழுதானதால், மனைவியின் மொபைல் போனை பயன்படுத்தினார். அப்போது நஜீனா ஷிபா பர்வீன் போனுக்கு வெவ்வேறு ஆண்களிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. மனைவியின் போன் அழைப்புகளை சோதனை செய்து பார்த்தபோது ஆண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து தனது மனைவியிடம் முத்துராம் கேட்டார். அது எனது தனிப்பட்ட விஷயம் என நஜீனா ஷிபா பர்வீன் கூறினார். இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. மேலும் நஜீனா ஷிபா பர்வீன் வர் தனது வயது 32 என்பதை 28 என சொல்லியதும் தெரியவந்தது.
இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்தனர். பணத்திற்கு ஆசைப்பட்டு, தன்னை போல பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நஜீனா ஷிபா பர்வீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முத்துராம் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவு படி, முத்துராமிடம் 20.50 லட்சம், 37.5 பவுன் மோசடி செய்ததாக நஜீனா ஷிபா பர்வீன் மீது கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.