ஒற்றை - இரட்டை வாகனக் கட்டுப்பாடு ஒத்திவைப்பு; மழையால் டெல்லி மாசு குறைந்ததில் அரசு ஆசுவாசம்!
டெல்லியில் மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டிருந்த ஒற்றை - இரட்டைப்படை வாகனப் போக்குவரத்து கட்டுப்பாடு, நகரில் மாசு அளவு குறைந்ததில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலகளவில் உச்ச மாசு கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி முதன்மை பிடித்திருந்தது. உலக சுகாதார நிறுவனம் வரையறுத்த மாசு அளவை விட டெல்லியில் அதன் அளவு 80 முதல் 100 மடங்கு அதிகரித்திருந்தது. தேசத்தின் தலைநகருக்கே உரிய, அதிகப்படி வாகனங்கள் வெளியிடும் புகை மட்டுமன்றி, பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் விவசாயக் கழிவுகள் எரிப்பு காரணமாகவும் டெல்லியின் மாசு உச்சமடைந்தது.

கடந்த வாரம் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு மாசு அளவு அபாயகரமாக மாறியது. இதனைத் தொடர்ந்து ஒற்றை - இரட்டை என வாகனங்களின் பதிவெண் அடிப்படையில், அவற்றை அடுத்தடுத்த நாட்களில் அனுமதிக்கும் பழைய யோசனையை டெல்லி அரசு கையில் எடுத்தது.
தீபாவளி முடிந்ததும் நவ.13 முதல் நவ.20 வரை, இந்த வகையில் வாகனங்களை சாலைகளில் அனுமதிப்பது என முடிவு எட்டப்பட்டது. தனியார் வாகனங்களில் 4 சக்கர வாகனங்கள் மட்டுமே இந்த கட்டுப்பாட்டுக்குள் வரும். இதன் மூலம் நகரின் மாசு மற்றும் போக்குவரத்து நெருக்கடி, எரிபொருள் நுகர்வு உள்ளிட்டவை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக டெல்லியின் காற்று மாசு கணிசமாக தணிந்தது. இதனால் நவ.13க்கு திட்டமிட்ட ஒற்றை - இரட்டை பதிவெண் கார்களுக்கான கட்டுப்பாடு ஒத்திவைக்கப்பட்டதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லி சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபால் ராய் இன்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தீபாவளி முடிந்த பின்னர் காற்றின் மாசு அளவை பரிசீலித்து அதற்கேற்ப புதிய முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!