நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற உள்ள சந்தனக்கூடு வழிபாட்டை முன்னிட்டு ஜனவரி 3-ம் தேதியன்று நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் ஆர்வமுடன் வந்து வழிபடும் நாகூர் ஆண்டவர் தர்காவில் 466-ம் ஆண்டு கந்தூரி விழா இன்று (டிச. 24) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனை முன்னிட்டு தர்காவில் உள்ள மினராக்களில் பாரம்பரிய முறைப்படி பாய்மரம் ஏற்றப்பட்டுள்ளது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வுகள் எதிர்வரும் ஜன.2-ம் தேதி நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலமும், ஜன.3-ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் இந்தியா முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொள்வது வழக்கம்.
அப்படி நாகை மாவட்டத்தில் முக்கியமான விழாவாக சந்தனக்கூடு நடைபெறுவதால் அதனை முன்னிட்டு ஜனவரி 3-ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.