
இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரளம், திரிபுரா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அந்த இடங்களுக்கு இடைத்தேர்தலை நடத்திட இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் தும்ரி, கேரளத்தின் புதுப்பள்ளி, திரிபுராவின் போக்ஷாநகர் மற்றும் தன்புர், மேற்குவங்கத்தின் துப்குரி (தனித்தொகுதி), உத்தரப்பிரதேசத்தின் கோசி, உத்தரகண்டின் பகேஷ்வர் ஆகிய 7 தொகுதிகளுக்கும் செப்டம்பர் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து நாளையே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 17 ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஆகஸ்ட் 18 ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற விரும்புவோர் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதி அண்மையில் உயிரிழந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் தொகுதி ஆகும். இந்த ஏழு தொகுதிகளிலும் செப்டம்பர் 5ம் தேதியன்று தேர்தல் நடத்தப்பட்டு செப்டம்பர் 8- ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால்.அதற்கான ஆயுதங்களை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. இந்நிலையில், 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.