வடகிழக்கு பருவமழை விலகியது: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை விலகியது: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்று விலகியது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலையாக நாமக்கலில் 13.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் உறைப்பனிக்கு வாய்ப்புள்ளது. வரும் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in