
சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் நித்யானந்தாவிற்கு ஜாமீனில் வெளி வரமுடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு ராமநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவிற்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் இருந்த பெண் சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடதி காவல் நிலையத்தில் நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் இதுவரை அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பிக்கிறேன் என்றார். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.