டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையை தொடரலாம் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், டெண்டர் வழங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்படங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.
தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறி ஆகஸ்ட் 2-ம் தேதி அறிவிப்பாணைக்கு தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமைதாரர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுக்களில், ஏற்கெனவே பார் உரிமம் பெற்றுள்ள தனக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் இடையில் அந்த இடத்திற்காக குத்தகை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளபடவில்லை என்றும், நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அந்த இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்க தன்னை நிர்ப்பந்திக்க முடியாது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பார் உரிமையாளர்களின் உரிமையை பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெண்டரை ரத்து செய்து, உரிமத்தை நீடித்து தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், டெண்டர் நடைமுறையை தொடரலாம் என்றும், டெண்டர் வழங்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுவுக்கு ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.