தீவிரவாத தடுப்பு படையை உருவாக்க அவசியமில்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தீவிரவாத தடுப்பு படையை உருவாக்க அவசியமில்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாகவும், ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தியா மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும்கூட தீவிரவாத தாக்குதல் போன்ற நேரங்களில் அதனை எதிர்கொள்ள ஒரு சிறப்பு அமைப்பு தேவை என்பதால், மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் ஏதும் இல்லை என்றும் மனுவில் கூறியுள்ள நிலையில், பயங்கரவாத தடுப்புப்படை அமைக்க கோரி வழக்கு தொடர்ந்தது ஏன் என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த மனுதாரர் ஜெகன்நாத், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயங்கரவாத தடுப்புக்கு என பிரத்யேகமாக சிறப்பு படையை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இலங்கையிலிருந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கு தமிழக காவல்துறையில் ஏற்கெனவே மூன்று பிரிவுகள் உள்ள நிலையில், புதிய பிரிவு அமைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டி காட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in