மருத்துவச் சிகிச்சைக்காக அடைக்கலம் கேட்டு இலங்கை அதிபருக்கு நித்யானந்தா கடிதம் எழுதியுள்ளார்.
சர்ச்சை சாமியார் நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2018-ம் ஆண்டு தலைமறைவான நித்யானந்தா, தனக்கென ஒரு தீவை விலைக்கு வாங்கி அந்த இடத்திற்கு கைலாசா எனப் பெயரிட்டு, அங்கு வசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. அடுத்த சில தினங்களில், ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என முகநூல் பதிவின் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். ஆனாலும், நித்யானந்தா உடல் நலக்குறைவால் இருப்பதை அவர் வெளியிட்ட படங்களும், அவர் கடிதமும் உறுதி செய்தன. இதைத் தொடர்ந்து குருபூர்ணிமா அன்று நேரலையில் தோன்றிய நித்யானந்தா, வழக்கம் போல ஆங்கிலத்திலும், தமிழிலும் உற்சாகமாக உரையாற்றினார்.
இந்நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக அடைக்கலம் வழங்குமாறு இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு நித்யானந்தாவின் சீடர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “நித்யானந்தா உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அவருக்கு அவசரமாக மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். ஆனால், கைலாசா தீவில் போதுமான வசதிகள் இல்லை. ஆதலால், மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும். நித்யானந்தா உடலுக்கு என்ன நேர்ந்தது என்பதை கைலாசாவில் உள்ள மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நித்யானந்தாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு அரசியல் புகலிடம் தர வேண்டும்.
விமான ஆம்புலன்ஸ் மூலம் நித்யானந்தாவை இலங்கைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவ வேண்டும். சில சக்திகளால் நித்யானந்தாவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நித்யானந்தாவின் மருத்துவச் சிகிச்சைக்கு தேவையான அனைத்து செலவையும் கைலாசா அரசு ஏற்றுக்கொள்ளும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி கடிதம் எழுதப்பட்டுள்ள நிலையில், இலங்கை தரப்பில் இதுவரை எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.