பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறி சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டிற்குள் என்ஐஏ அதிகாரிகள் திடீரென புகுந்து சோதனை நடத்தினர். இதேபோல் சேலத்திலும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் அண்மையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அந்த அமைப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சகம் திடீர் தடை விதித்தது. இந்த தடையைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறி சிவகங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கையில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன். இவர் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்று வந்துள்ளார். இவர் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஸ்வரன் வீட்டுக்கு இன்று காலை வந்த என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், சேலத்தில் கடந்த மே மாதம் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் இவர்களுக்கு உதவியதாக கபிலன் என்பவர் உள்பட 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து செட்டிசாவடி பகுதியில் வாடகை வீட்டில் வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள், மருந்துகளை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கி உள்பட சக்தி வாய்ந்த வேறு ஏதாவது தயாரித்தார்கள் என்பது குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர் என்ஐஏ அதிகாரிகள்.