20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மகிழ்ச்சி ஒரே நாளில் கலைந்தது: கண்கலங்கிய கிராம மக்கள்

20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மகிழ்ச்சி ஒரே நாளில் கலைந்தது: கண்கலங்கிய கிராம மக்கள்

இருபது ஆண்டுகளாகச் சாலை வசதி இல்லாமல் தவித்த மலைவாழ் மக்களுக்கு தரமற்ற சாலையை அமைத்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மேலும் கைளால் அப்பகுதியினர் தார் சாலையை பெயர்த்தெடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கவுண்டனூர் ஊராட்சியில் உள்ளது குட்டூர் கிராமம். சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளான மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் சூழல் உள்ளது. தங்கள் கிராமத்திற்குப் பல ஆண்டுகளாக தார் சாலை அமைத்துத் தரவேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. கூட்ரோடு பகுதியில் இருந்து குட்டூர் கிராமம் வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்குத் தார் சாலை அமைக்கப்பட்டது.

ஒரே நாளில் முடிக்கப்பட்ட தார் சாலை தரமற்ற வகையில் உள்ளதாகவும், இதுதொடர்பாக புகார் அளித்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நெடுஞ்சாலைத் துறையினர் யாரும் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ளவில்லை என அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். இருபது ஆண்டுகள் கழித்து தங்கள் பகுதிக்குத் தார் சாலை அமைக்கப்படுவது மகிழ்ச்சியாக இருந்தும், தரமற்ற தார் சாலை அமைத்தது மிகவும் வருத்தம் தருவதாகவும், தற்போது பெய்யக் கூடிய பருவமழைக்கு இந்த தார் சாலை தாங்காது எனவும் வேதனையாகத் தெரிவிக்கின்றனர்.

இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமற்ற தார் சாலை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த கிராம மக்கள் கைகளால் தார் சாலையை பெயர்த்து எடுக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டு தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in