தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. மங்களூரு, குடகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இந்த நிலையில், தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சுப்ரமணிய கிராமத்தில் பர்வத்முகி என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் சோமசுந்தர்(34) என்ற வாலிபர் மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக சோமசுந்தரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்த சோமசுந்தருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இதனால் அவரது மனைவி, உறவினர்கள் கதறி துடித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடகு மாவட்டம், மடிகேரி அருகே உள்ள பெட்டகேரியைச் சேர்ந்த தொழிலாளி பிரமாத் கர்மானி(37). கனமழை பெய்த போது இவர் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் கர்மானி படுகாயமடைந்தார்.
இதையடுத்து உடனடியாக அவர் மடிகேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள கர்மானிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.