மயிலாடுதுறையில் உள்ள புகழ்வாய்ந்த மயூரநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 17-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நேற்று இரவு தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோயிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நாட்டியாஞ்சலி விழா சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக நேற்று இரவு தொடங்கியது.
பிப்ரவரி 18-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.
மங்கள இசையுடன் துவங்கிய நிகழ்வில் கோவை ஸ்ரீ நாட்டிய நிகேதன் வழங்கிய வந்தே பாரதம் நிகழ்ச்சியில் பல மாநில நாட்டியக் கலைகளின் சங்கமமான கதக், ஒடிசி, மோகினியாட்டம், பரதநாட்டியம் குச்சுப்புடி உள்ளிட்ட ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது.
இதில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை, கோவை, சேலம் மயிலாடுதுறை, பெங்களூரு, வாலாஜா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். ஏராளமானோர் ஆர்வமுடன் மயூர நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.