காரில் தேசியக்கொடி, சுழல் விளக்கு: வக்ஃபு போர்டு வாரிய தலைவர் மீது வழக்குப்பதிவு!

காரில் தேசியக்கொடி, சுழல் விளக்கு: வக்ஃபு போர்டு வாரிய தலைவர் மீது வழக்குப்பதிவு!

அரசு விதிகளுக்கு எதிராக காரில் தேசியக்கொடி, அரசு முத்திரை, சுழல் விளக்குடன் வலம் வந்த வக்ஃபு போர்டு வாரிய தலைவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு வக்பு போர்டு வாரிய தலைவராக கடந்த 2021 ஆண்டு அப்துல் ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 ஆண்டுகள் இந்த பதவியை வகிக்கும் அப்துல்ரகுமான் கடந்தாண்டு ஜூலை மாதம் பதவியேற்ற பின்னர் தனது சொந்த காரில் தேசியக்கொடி, தமிழக அரசு முத்திரை மற்றும் சுழல் விளக்கு வைத்து வலம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் இந்திய குடியரசு தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், கேபினட் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட சிலரே சுழல் விளக்கை பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும்.

ஆனால், அதற்கு எதிராக தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் விதிகளை மீறி, தேசியக்கொடி, அரசு முத்திரை, சுழல் விளக்குடன் காரில் பயணித்து வருவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு வக்ஃபு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் எம்.அஜ்மல்கான் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் அஜ்மல்கான் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் காவல் துறையினரை விசாரித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார், வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது தேசியக்கொடியை அவமதித்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்துல் ரகுமான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவராகவும், கடந்த 2009-ல் திமுக கூட்டணியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in