’மர்ம அறையில் மதமாற்றம்; ஆட்களை முடமாக்கி போதைப்பொருள் புகட்டல்’

அன்புஜோதி ஆசிரமத்துக்கு எதிராக அடுத்த பகீர்!
அன்புஜோதி ஆசிரமம்
அன்புஜோதி ஆசிரமம்

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தை மையமாகக் கொண்ட விசாரணையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அன்புஜோதி ஆசிரத்தின் முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை சேர்ந்த ஆர்.ஜி.ஆனந்த் உட்பட மூவர் இன்று அன்புஜோதி ஆசிரமத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வின் முடிவில், ஆசிரமத்தின் குறிப்பிட்ட 2 அறைகளைப் பூட்டி சீல் வைத்தனர். ஆசிரமத்தின் முறைகேடுகள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் அங்கே இருப்பதால் இந்த சீல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், “அன்புஜோதி ஆசிரமத்தில் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகம் நடந்திருக்கின்றன. ஆசிரமத்தில் தங்கியிருந்து தற்போது கீழ்பாக்கத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் சிலரை சந்தித்தபோது ஆசிரமத்தின் ’டார்க் ரூம்’ என்பது பற்றி கூறினார்கள். இந்த மர்ம அறையில் சிகிச்சை என்ற பெயரில் விளக்குகளை அணைத்துவிட்டு சில மாய நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைவர் மனதிலும் மத நம்பிக்கைகளை திணித்திருக்கின்றனர்.

அன்புஜோதி ஆசிரம வளாகத்தில் ஆனந்த் உள்ளிட்டோர் ஆய்வு
அன்புஜோதி ஆசிரம வளாகத்தில் ஆனந்த் உள்ளிட்டோர் ஆய்வு

மேலும் இந்த அறையில் வெவ்வேறு பெயரிலான ஒரே தேவைக்கான சுமார் 35 ஆயிரம் மாத்திரைகைகளை கைப்பற்றினோம். இவை உட்பட பல்வேறு போதை மருந்துகளை இல்லத்தில் அடைக்கப்பட்டு இருந்தோருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. இல்லத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் பெரும் மோசடி நடந்திருக்கிறது. சாலையோரம் தூங்கியவர்கள், கடந்தவர்கள் என பலரையும் மடக்கி, அவர்களின் நகை உள்ளிட்ட உடமைகளை பறித்துக்கொண்டு முடமாக்கி இல்லத்தில் சேர்த்து இருக்கின்றனர்.

2021ல் இவர்கள் தாக்கல் செய்த அறிக்கையின்படி, அன்புஜோதி ஆசிரமத்தில் 60 நபர்களுக்கு மட்டுமே தங்க அனுமதி உண்டு. ஆனால் 180 பேர் வரை அடைத்திருக்கின்றனர். அன்புஜோதி ஆசிரமத்துக்கு புதுச்சேரி, கர்நாடகம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்கள் என சுமார் 8 மாநிலங்களில் இதே போன்று ஆசிரமம் வைத்து செயல்படுவோரோடு மோசடி கூட்டணி இருந்திருக்கிறது. உதாரணமாக இவர்களுடன் தொடர்பில் உள்ள, பெங்களூரு ஆசிரமம் ஒன்று இதே அளவு நெருக்கடியான இடத்தில் பல நூறு நபர்களை அடைத்து வைத்திருக்கிறது. அடுத்தபடியாக நாங்கள் அங்கே ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in