
ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயில் பகல் 10 இரண்டாம் நாள் உற்சவத்தில் முத்து கிரீடம், வைர அபய ஹஸ்தத்துடன் ஸ்ரீநம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
'பூலோக வைகுண்டம்' என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று அதிகாலை ஶ்ரீநம்பெருமாள் விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார்.
இன்று பகல் பத்து இரண்டாம் திருநாளையொட்டி ஶ்ரீநம்பெருமாள் முத்து கீரிடம், வைர அபய ஹஸ்தத்துடன், பவள மாலை அடுக்கு பதக்கங்கள், முத்து சரம், அண்ட பேரண்ட பட்சி மாலை திருவாபரணங்கள் சாற்றி சிறப்பு தரிசனத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளினார்.
இன்று காலை ரெங்கநாதர் புறப்பாட்டின்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் உள்ளிட்டவர்களின் வருகையினால் பொதுமக்களின் இயல்பான தரிசனம் சற்று சிரமத்திற்கு உள்ளானது.