மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹசோரி கிராமத்தில் மர்மமான நிலத்தடி ஒலிகள் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், கிராமம் முழுவதும் நிலத்தடியில் மர்மமான ஒலிகள் கேட்பதைக் கண்டு குழப்பமடைந்துள்ளனர். ஹசோரி கிராமத்தில் மர்மமான நிலத்தடி ஒலிகள் பதிவாகியுள்ளதை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
அறிவியல் விளக்கத்தைப் பெறுவதற்காக, இந்த வினோதமான நிகழ்வை ஆய்வு செய்ய இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் நிபுணர்கள் கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்யவேண்டும் என மாவட்ட அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிலங்கா தாலுகாவில் உள்ள ஹசோரி கிராமம் கில்லாரியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது, அங்கு 1993 ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 9,700 பேர் உயிரிழந்தனர். ஆனால் அந்த பகுதியில் இப்போது எந்த நில அதிர்வு நடவடிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் தகவல்களின்படி, செப்டம்பர் 6 முதல் நிலத்தடியில் உரத்த மர்ம ஒலிகள் கேட்கப்படுகின்றன என தெரிவித்துள்ளனர். இதனால் கிராம மக்கள் அச்சமும் குழப்பமும் அடைந்துள்ளனர். லத்தூர் மாவட்ட ஆட்சியர் பிருத்விராஜ் கிராமத்திற்கு நேரில் சென்று மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மகாராஷ்டிராவின் நாந்தேட்டின் சுவாமி ராமானந்த் தீர்த் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு இன்று கிராமத்திற்கு வருகை தரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.