
ஆந்திராவில் இரவில் ஆட்டு இறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் அல்லூரி சீத்தாராமராஜு மாவட்டத்தில் உள்ளது அரக்கு கனேலா கிராமம். இந்த கிராமத்திற்குட்பட்ட தடக பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதன் பிறகு உறங்கியுள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென அவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதனால் 9 பேரின் உடல்நிலையும் மோசமடைந்தது. இதையடுத்து கிராமத்தினர், அவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். இதில் 5 வயதான மீனாட்சி என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து மற்ற அனைவரும் மேல் சிகிச்சைக்காக விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.