இஸ்லாமியர்கள் திருமணங்களில் போக்சோ சட்டத்தில் இருந்து அவர்களுக்கு விலக்கு எதுவும் அளிக்கப்படவில்லை என கேரள உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு கூறியது.
போக்சோ சட்டம்
கடந்த 2012-ம் ஆண்டு, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி, போக்சோ சட்டம் அமல்படுத்தப்பட்டது. குழந்தைகளை பாலியல் ரீதியான குற்றங்கள், மைனர் திருமணங்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தோடு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 18 வயதுக்கு உட்பட்ட திருமணங்கள் இதனால் குழந்தை திருமணமாகக் கருதப்படுகிறது. இந்தத் திருமணங்களைச் செய்வது சட்டப்படி குற்றமாகும். இவர்கள் மீது போக்சோ சட்டமும் பாய்கிறது.
இந்நிலையில் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு கொரியன் தாமஸ் முன்பு கலிதூர் ரஹ்மான்(31) என்பவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வந்தது. கலிதூர் ரஹ்மான் தன் 15 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததான வழக்கு அது. இவ்வழக்கில் கலிதூர் ரஹ்மானின் வழக்கறிஞர் இஸ்லாமிய தனிநபர் சட்டம் பருவம் அடைந்த அதாவது 15 வயதான பெண்களைத் திருமணம் செய்ய அனுமதிப்பதாக வாதிட்டார். ஆனால், நீதிபதி பெச்சு கொரியன், “இஸ்லாமிய தனிநபர் சட்டம் வேறு. போக்சோ சட்டத்தின் நோக்கம் வேறு. பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றங்கள் 15 வயது முதல் 18 வயதுடைய முஸ்லீம் பெண்களின் திருமணம் சட்டப்படி செல்லாது என முன்னரே தீர்ப்புக் கூறியுள்ளன. குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன் படியும் அது தவறானது ”என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பில் டெல்லி நீதிமன்றம், மைனர் முஸ்லீம் திருமணம் செல்லும் என தீர்ப்புகொடுத்தது முன்னுதாரணமாகக் காட்டப்பட்டது. ஆனால் அதை கேரள உயர்நீதிமன்றம் நிராகரித்தது. போக்சோ வழக்கில் கலிதூர் ரஹ்மான் கைது செய்யப்பட்டது சரியே என கருத்து தெரிவித்த நீதிபதி பெச்சு கொரியன், ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.