திருமணம் செய்து கொள்ளவிட்டால் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய காதலனை கொலை செய்த காதலி, அவரது பெற்றோர் 7 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கவுதம் புத்தகநகர் பிஸ்ராக் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் தனது தம்பி ரஞ்சித்தை காணவில்லை என 2022 நவ.24-ம் தேதி பிஸ்ராக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக எஸ்.ஐ ஆஸ்தா சவுத்ரி தலைமையில் தனிப்படை போலீஸார் ரஞ்சித்தைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ரஞ்சித்தும்,காஜியாபாத்தில் வசிக்கும் பிஹாரைச் சேர்ந்த நேஹா(23) என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேஹாவின் நடவடிக்கையை போலீஸார் கண்காணித்து வந்தனர். அத்துடன் ரஞ்சித், நேஹா வீட்டுக்கு அடிக்கடி வந்து போனது தெரிய வந்தது. இதனால் நேஹாவைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, 7 மாதங்களுக்கு முன்பே ரஞ்சித் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது.
இதுதொடர்பாக போலீஸார் விசாரித்த போது அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வெளியானது. ரஞ்சித்தும், நேஹாவும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். நேஹாவை திருமணம் செய்ய வேண்டும் என்று ரஞ்சித் நினைத்துள்ளார். ஆனால், இப்போது திருமணம் வேண்டாம் என்று நேஹா கூறியுள்ளார். இதனால் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக ரஞ்சித் குறுக்கு வழியில் யோசித்துள்ளார்.
நேஹாவுடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் போது அவருக்குத் தெரியாமல் அதை, புகைப்படம், வீடியோ ரஞ்சித் எடுத்துள்ளார். இவற்றைக் காட்டி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ரஞ்சித் டார்ச்சர் கொடுத்துள்ளார். இல்லாவிட்டால், ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நேஹா, தனது குடும்பத்தினரிடம் ரஞ்சித் மிரட்டுவதைக் கூறியுள்ளார். இதனால் நேஹா உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ரஞ்சித்தைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். திருமணம் குறித்து பேச வீட்டிற்கு வாங்க என்று ரஞ்சித்தை கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி, நேஹா அழைத்துள்ளார். அப்படி நம்பி போன ரஞ்சித்தை நேஹா கண்முன்பே அவரது பெற்றோர், சகோதரர்கள் சுபம் மற்றும் சிவம், உறவினர் மனீஷ் ஆகியோர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
இதன் பின் அவரது சடலத்தை சிபியானா புஸூர்க் பகுதியில் உள்ள ரயில்வே யார்டு இருந்த காட்டிற்கு கொண்டுச் சென்றுள்ளனர். அங்கிருந்த குளத்தில் ரஞ்சித்தின் சடலத்தை போட்டுள்ளனர். அப்பகுதியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக ஜன.26-ம் தேதி பிஸ்ராக் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அங்கிருந்த ஷீ, பெட்ல் மற்றும் சாவி மூலம் அது ரஞ்சித்தின் எலும்புக்கூடு எனத் தெரிய வந்தது.
அதை போட்டவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் தான் நேஹா, அவரது பெற்றோர், சகோதரர்கள், உறவினர் உள்ளிட்டோர் நொய்டா போலீஸாரிடம் நேற்று சிக்கியுள்ளனர். ரஞ்சித் கொலை செய்யப்பட்டு 7 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.