சென்னையில் சுவர் இடிந்துவிழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகளை இன்று சந்தித்த அமைச்சர்கள் 5 லட்சம் நிதியுதவியை வழங்கினர்.
சென்னை புளியந்தோப்பு பிரகாஷ் காலனியில் சாந்தி (48) என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 1-ம் தேதி காலை சாந்தி வீட்டின் முன்பு இருந்த பம்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் பால்கனி இடிந்து சாந்தி மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் வராததே சாந்தி மரணத்துக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக புளியந்தோப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர் பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரின் இன்று உயிரிழந்த சாந்தியின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும், சாந்தியின் மகளிடம் தமிழக அரசு சாரபில் 4 லட்சத்துக்கான காசோலையும், திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கினர்.