ஒரு வருட மணவாழ்க்கையில் வீசிய புயல்: மகளுக்காக மனமுடைந்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு

ஒரு வருட மணவாழ்க்கையில் வீசிய புயல்: மகளுக்காக மனமுடைந்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு

திருமணம் செய்து கொடுத்த தங்களது ஒரே மகள், கணவனை பிரிந்து வந்து விட்ட நிலையில் மகளின் வாழ்க்கை இப்படி ஆயிற்றே என மனமுடைந்த பெற்றோர், மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள வெள்ளாங்கோடு என்ற ஊரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். (52), இவரது மனைவி ராஜேஸ்வரி (46). இவர்களது மகள் நித்யா (22). இவரை வெளிநாட்டில் வேலை பார்ப்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் ஒரு வருடம் கூட இருவரும் சேர்ந்து வாழவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனைப் பிரிந்து தாயின் வீட்டிற்கு நித்யா வந்து விட்டார்.

கடந்த சில மாதங்களாக தாயின் வீட்டில் இருந்து வரும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் பெற்றோருக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கணவனிடம் விவாகரத்து கேட்டு நித்யா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது இதனால் மகளின் மணவாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற மன வருத்தத்தில் இருவரும் இருந்திருக்கின்றனர்.

இந்த வேதனையால் ராஜேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டுனரான கிருஷ்ணனுக்கு சிறிது கடன் பிரச்சினையும் இருந்துள்ளது. இதனால் பெரும் மனவேதனையில் தவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மூவரும் படுக்கச் சென்றுள்ளனர். காலையில் வெகு நேரம் அவர்கள் யாரும் வெளியில் வராததால் சந்தேகப்பட்ட மாடியில் வசிக்கும் கிருஷ்ணனின் தாயார் வள்ளியம்மாள் கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார்.

இப்போது வாயில் கதவு தாழிடப்படாமல் இருந்தது தெரிய வந்தது. அதையடுத்து கதவைத் திறந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையிலேயே மூவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அருமனை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர்கள் அங்கு சோதனை செய்தபோது அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அந்தக் கடிதத்தில் தங்கள் சாவுக்கான காரணத்தை அவர்கள் எழுதி வைத்திருந்தனர். கடன் தொல்லை மற்றும் மகளின் வாழ்க்கை ஆகியவற்றால் மன வேதனைக்கு உள்ளாகியிருக்கிறோம். தொடர்ந்து கஷ்டங்கள் வருவதால் சாவது என முடிவெடுத்தோம். எங்கள் உடல்களை எங்களுக்கு சொந்தமான அரை சென்ட் நிலத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

மகளின் மணவாழ்க்கை மற்றும் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in