
ராசிபுரம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மகன் கண்ணெதிரே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜியா(48). இவரின் மகன் ரவிக்குமார்(25). நேற்று மாலை ஏழு மணியளவில் ரவிக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் தாய் விஜியாவை ஏற்றிக் கொண்டு ராசிபுரம் நோக்கி வந்துள்ளார். ராசிபுரம் அடுத்த எல்ஐசி மேம்பாலத்தில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது. அதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். விஜியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜியா உயிரிழந்தார். ரவிக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கண்ணெதிரே விபத்தில் சிக்கி தாய் உயிரிழந்துள்ள சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.