ஒன்றரை வயது மகளை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வெங்கடாச்சலபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(30). இவர் தன் தந்தையோடு சேர்ந்து பால் வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணோடு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் அகிமா என்ற பெண் குழந்தை இருந்தது.
நேற்று மகேந்திரன் தன் பெற்றோருடன் அருகில் இருந்த தோட்டத்திற்குச் சென்று இருந்தார். மாலையில் வீடு திரும்பிய போது பிரவீனாவும், அவரது ஒன்றரை வயது மகள் அகிமாவும் ஒரே சேலையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்திருந்தனர். தேவர்குளம் போலீஸார் இருவரையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், “மகேந்திரன், அவரது பெற்றோர் ஆகியோருக்கும், பிரவீனாவுக்கும் இடையில் குடும்பச் சண்டை அதிகளவில் இருந்துவந்தது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த பிரவீனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சேலையைப் போட்டு இறுக்கி கொலை செய்துவிட்டு, அதே சேலையின் இன்னொரு முனையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
குடும்பப் பிரச்சினையில் மகளைக் கொலை செய்துவிட்டுத் தாயும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.