
விழுப்புரம் மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய், தனது பச்சிளங் குழந்தையோடு தரையில் படுத்திருப்பது போன்ற காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில், படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக, அறுவை சிகிச்சை மூலம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளங்குழந்தை தன் தாயுடன், எந்த அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாமல் வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் காட்சி கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு என்று ஊரை ஏமாற்றி வருகிறது ஊழல் திமுக அரசு. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவது தொடர்கிறது. தொடர்ந்து துயர சம்பவங்கள் நடந்த பிறகும், அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஊழல் வழக்கில் கைதான சாராய அமைச்சருக்குக் கூட தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை வேண்டும் என்று கேட்டதையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் கட்சியினர் நடத்திவரும் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்க, ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளை, பாதாளத்துக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறதா திமுக" என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.