பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தாய் மொழிக் கல்வியை ஊக்குவிக்கத் தான் தேசிய கல்விக்கொள்கை திட்டம்: சொல்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தாய் மொழிக் கல்வியை ஊக்குவிக்கத் தான் தேசிய கல்விக்கொள்கைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக 54-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "குரு பூர்ணிமா நாளில் பட்டமளிப்பு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சக்தி வாய்ந்த தமிழர்கள் உலகம் முழுவதிலும் ஆட்சி செய்து வருகிறார்கள், கூகுள் சுந்தர்பிச்சை, சிவநாடார், விஷ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பெருமை சேர்த்து வருகின்றனர்.

தமிழ் மொழியை உலகம் முழுவதிலும் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி. ஐநா சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனக் கூறி பேச்சை தொடங்கியவர் மோடி. வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கவிஞர் பாரதியாரின் பெயரில் இருக்கை அமைத்துள்ளவர் மோடி. மேலும், பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழ்மொழியின் பெருமையை பரப்பி வருகிறார்" என்றார்.

தொடர்ந்து, "இந்தியா, கரோனா சவாலையும் கடந்து பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். தாய் மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காகத் தான் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையில் தான் தாய் மொழியில் நம்முடைய கருத்துக்களைப் படிக்க முடியும். உலகெங்கும் முன்னேற்றும் கல்விக் கொள்கையாக தேசிய கல்விக்கொள்கை இருக்கும், தாய் மொழிக் கல்வியை ஊக்குவிக்கத் தான் தேசிய கல்விக்கொள்கைத் திட்டம் உள்ளது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in